கண் இமைக்கும் நேரத்தில்
மின்னலாய் பறந்தன வாகனங்கள்...
அரை-குளியல் அவசரத்தில்
அரை கப் காபி குடிக்க கூட
நேரமில்லாததை நினைத்து
கடிந்து கொண்டிருந்தேன்
பேருந்தில் அமர்ந்துகொண்டு....
பேருந்து கடந்து செல்லும் சாலையின்
ஓரமாய் கூடி இருந்த கூட்டத்தை
கண்டு திரும்பிய தலைகளுள் எனதுமிருந்தது...
‘உயிர் போயிற்று,
உடல் இதோ இங்கே இருக்கிறது’ என,
கடந்து செல்பவருக்கெல்லாம்
தான் இருக்கும் இடத்தை
அடையாளம் காட்டியது
பாதாள சாக்கடையில் முங்கி கிடப்பவனின்
கால்கள், வெளியே நீட்டி கொண்டு...
இறந்து கிடப்பவனின் ஆன்மா
ஆயிரத்து எட்டாவது ஆளாக
என்னிடமும் சொல்லியே விட்டது,
“பார்த்து சிலிர்த்து
, கடந்து செல்ல
இங்கு நடந்தேறியது மயிர்க்கூச்சல் அல்ல
உயிர் கூச்சல் " என்று...
-மகா