Showing posts with label மலர். Show all posts
Showing posts with label மலர். Show all posts

Tuesday, October 28, 2014

காலை...


நிலவு உறங்க போகும் நேரம்,
சேவல் கூவி என் உறக்கத்தை கெடுத்ததால்
இது கொக்கரக்கோ காலையோ?

தோட்டத்து பூ செடியில் மொட்டு ஒன்று 
கண்பரிக்கும் அழகோடு மலர்ந்தது கண்டு களிப்புற்றதால்
இது மலர்விடு காலையோ?

கண்பரித்த மழலை மொட்டு மேல் 
பொன் பொறித்த விதமாய் இருக்கும்
பனித்துளி உணர்த்துகிறது,
இது பனி விழும் காலை...

சட்டென்று கேட்ட குட்டி நாயின் கூச்சல் 
என் கவனத்தை ஈர்த்தது...
அது வெறும் கூச்சல் அல்ல,
விளையாட்டு கூச்சல்,
தாயை பார்த்து குட்டி நாய் போடும் செல்ல கூச்சல்,
தாய்,குட்டியை தடவி தரும் போது போடும் ஆசுவாச கூச்சல்,
தாயின் அருகில்,அன்பில்,அரவணைப்பில் 
மூழ்கி போன நிறைவு கூச்சல்
அந்த தாய் சேய் உறவு, 
பார்க்க பார்க்க சிலிர்த்தது

திடீரென்று தாய் தன் குட்டியின் கழுத்தை கவ்வி கொண்டு
குப்பை தொட்டி ஒன்றன் அருகில் பத்திர படுத்தியது,
மனித நடமாட்டம் அதிகமானதாலோ என்னவோ...

இதென்ன !!!
நாய்க்கும் ஆறாம் அறிவு வளர்ந்ததோ என வியந்தேன்

வியந்த அதே நேரம் தாய் பாசத்திற்கு அறிவு பொருட்டு இல்லை என்பதை உணர்ந்தேன்.... 

இந்த அழகிய காட்சி என் மனதை தொட்டு சொன்னது , 
இது அன்பின் வாசம் நிறைந்த காலை... 

காலையின் அழகை கவித்துவத்தோடு ரசித்த பின்,
என்னால் மறுபடியும் காதல் வந்தது தேநீர்க்கும் செய்தி தாளுக்கும்...

 பார்வையை செய்தி தாள் பக்கம் திருப்பினேன்...
அதில் “பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் அனாதையாக இறந்து கிடந்தது
என்ற செய்தியை வாசித்ததும் தோன்றியது ஒன்று தான்...

இது ஆறு அறிவு மனிதன் அழிந்து கொண்டிருக்கும், தன்னை அழித்து கொண்டிருக்கும் உலகத்தை பற்றிய கவலை மிகுந்த காலை  என...

ஆறு அறிவு மனிதன்!!! இருந்தென்ன பயன்... ??