Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

Saturday, January 31, 2015

நீண்ட நெடும் ஆசைகள்!!!


என் பிம்பங்கள் அனைத்தையும்
சற்று நேரம் ஓரமாக அமர வைத்து விட்டு, 
என் அகத்தை உற்று நோக்க ஆசை. 


பார்த்த பின்
தனை உடம்பில் இருந்து கழற்றி
பழுது பார்த்து , சீர்திருத்தி, துடைத்து
திரும்பி மாட்டி கொள்ள ஆசை.


என்னுடன் எப்பொழுதும்
துணைக்கு வரும் எனது நிழலை
சற்று தோளில் சுமந்துச் செல்ல ஆசை.


நான் உதிர்க்கும் சிரிப்பை எல்லாம்
பொறுக்கி வைத்துக் கொண்டு
என் அழுகையில் உபயோகித்துக் கொள்ள ஆசை.


என்னிடம் இருந்து வந்த வார்த்தைகள்
ஒவ்வொன்றும் திரும்பி நின்று
ஒரு முறை என்னிடம்
அனுமதி கேட்டுச் செல்ல ஆசை.


நான் எழுதிய எழுத்துக்கள் அனைத்தும்
ஒன்று சேர்ந்து நீண்ட நெடும் கண்ணாடியாய்
விரிந்து நிற்க,
அதன் பிரதிபலிப்பில்
எனது ஒரு பாதியையேனும் கண்டு விட ஆசை. 
-மகா.

Wednesday, October 22, 2014

திருத்தி எழுதிய ஆசைகள்!!!

கொட்டென்று கொட்டிய மழைதனில் 

திளைத்த பூக்களை, 

சட்டென்று முத்தமிட ஆசை... 


சில்லென்று வீசும் காற்றின் இன்பத்தை 

என் சொல் கொண்டு உணர வைக்க ஆசை... 


நான் எழுதும் கவிதைகளை 

நால்வரேனும் படித்து, 

மூவரேனும் திளைத்து, 

இருவரேனும் சிந்தித்து, 

ஒருவரேனும் உணர ஆசை.... 


மழலையின் சிரிப்பிற்காக 

மலைகளை குடைய ஆசை... 


மனம் விட்டு சிரிக்கும் தருணம் 

தினம் பெற்று மகிழ ஆசை... 


பறக்கும் பட்டாம்பூச்சியின் பின்னே சென்று 

அதன் சுதந்திரத்தை ரசிக்க ஆசை... 


கடற்கரையில் அமர்ந்து 

என் கவிதைகளை படிக்க ஆசை... 


என் புலம்பல்களை படித்து படித்து 

அதன் அழகில் சிரித்து மகிழ ஆசை... 


-ஆசைகள் பிறக்கும்

-மகா 
  

குறிப்பு: மனிதனின் ஆசைகள் அளவற்றது... நானும் மனித சாயல் கொண்டவன் ஆதலால் என் ஆசை கவிதையும் அளவற்றது... இது தொடர்ந்து கொண்டே போகும்...