Tuesday, February 3, 2015

அக்றினை


மாணவர்கள் சூழ
இன்னும் சற்று நேரமே இருக்கும் பட்சத்தில்
பிஞ்சுப் பாதங்களை தாங்கிப் பிடிக்க
ஆயத்தமாகும் தாழ்வாரங்களும், 

அறிவோடு சேர்த்து வாழ்வையும் ஊட்ட
தயாராகி கொண்டிருக்கும்
வகுப்பறைகளும்,

கல்லால் அடிபட்டு விழ ஆவலோடு
காத்திருக்கும் பாதாம் பழங்களும்,

பெயர் தெரியா தேவதையின் தலையில் அமர
பூத்திருக்கும் செம்பருத்திப் பூக்களும்

மாணவர்களையும்
அவர்களின் புத்தகச் சுமைகளையும்
மடியில் ஏந்திக் கொள்ளத் தவமிருக்கும்
காலி வகுப்பறை மேசைகளும்,

குளித்து முடித்து
வெள்ளை அடித்துக் கொள்ள காத்திருக்கும்
குழந்தையைப் போல
கரும் பலகைகளும்

மரத்தடிகளும், தூண்களும்,
இரும்பு கதவுகளும், ஊஞ்சல்களும்

என இப்படி பள்ளியில் இருக்கும் அனைத்து
அக்றினைகளும்,
கடந்து செல்லும் என்னை பார்த்வுடன்
சட்டென்று திரும்பி,

எவ்வளவு நாள் ஆகுது பாத்து. எப்படி இருக்க?
என கேட்கையில்
“நல்லா இருக்கேன் என்று  
பதிலளித்தேன்
கண்ணீரை துடைத்து கொண்டே.
-மகா.  



No comments:

Post a Comment